வெள்ளி, நவம்பர் 11, 2011

தமிழ் வளர...

(கீழ்க்கண்ட என் கவிதையை "புரட்சிக் கவிஞர்" திரு. பாரதிதாசன் அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்)

*****

தமிழ் இனி மெல்லச் சாகும் - இது
தமிழ்ப் பெரியோர் வாக்கு
இல்லை எனவில்லை! தமிழ்
இன்று தொய்ந்து தானிருக்கிறது
என் செய்தால் தகும்
எந்தமிழ் மீண்டும் செழிக்க?

தமிழில்...
திரைப்படத்தைப் பெயரிடுவதாலோ?
துறைப்பாடத்தைப் பயில்வதாலோ??
அலுவலர் கையொப்பமிடுவதலோ???
அரசியலார் முழக்கமிடுவதாலோ????

செழித்துவிடுமா தமிழ்? இல்லை, இல்லை
செவிக் கொடுத்து கேளீர்!

"முப்பது கோடி முகமுடையாள்
எனினும் சிந்தனை ஒன்றுடையாள்"
இது வெறும் கூற்றல்ல! நம்
இந்திய தேசத்தின்
இயல்பு இதுவே!!
எங்கும்,
எதிலும் தமிழ் என்றால்
வேற்றுமையில் ஒற்றுமை காணாது
வேற்றுமையே மிஞ்சும்!!!

எனவே, எனவே
தமிழ் வளர...
தமிழில் படித்திடலாகாது
தமிழைப் படித்திடல் வேண்டும்

சங்க இலக்கியத்தையே போற்றுதல் விடுத்து
தங்க இடமின்றியே தவிக்கும் இளஞ்
சிங்கங்களை, நம் தேசத்து
தங்கங்களை
தமிழைப் பயில வைத்து
தழைத்து வாழ வழி வகுத்து
தாரீர்!
நம்மொழி ஆராய்ச்சியாளர்களுக்கு
நல்லதொரு ஊக்கத்தொகையும்
தன்னாலனைத்தும் முடியுமென்ற
தன்னம்பிக்கையும் தாரீர்!!
தனியாய், தமிழே தவமாய்
திடமாய் இருக்கும் தமிழறிஞர்க்கு
தகுதியறிந்து தேவைகளை தாரீர்!!!
அவர்கள்...
தமிழை மட்டுமல்லாது
தாய் தேசத்தையும் முதலில்
துளிர்க்கச் செய்வர்; பின்
தழைக்கச் செய்வர்

இவையாவும் செய்திடின்
இனி வரும் சந்ததியரேனும்
தமிழை கட்டாய பாடமாய்
தமக்கிது உதவாதென்ற
வெறுப்புடன் கற்காது
விருப்புடன் கற்பர்;
தமிழை வளரப்பர்!
தமிழ்...
உணர்வாய் எவருடனும்
உறவாய் இருக்க உதவட்டும்
வெறியாய் எவற்றிலும்
வெறுமை காணுதற்கு வேண்டாம்!!

இது தமிழ் பேசும்
இவ்விந்தியனின் வேண்டுகோள்!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக